Chapter 3
அந்தத் தாயின் முகத்தில் என்ன துயரம்... என்ன சோர்வு... அதிலே பசி... என்று எழுதிய மாதிரி கலங்கிய கண்கள்... நம்பிக்கையிழந்த கண்கள்... அந்தக் கை கனவானை நோக்கி நீட்டியது சற்றாவது விலகவில்லை. என்ன நம்பிக்கை!
அவளைக் காணவும் மற்றதை மறந்தேன். அவளுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று என் உள்ளம் தூண்டியது. ஆனால் சென்னையிலே தர்ம சிந்தனை ஒரு போக வஸ்து. அதை என்னைப் போன்றவர்கள் எளிதில் அனுபவித்துவிட முடியாது. நானும் யார்? அவளைவிட ஒருபடிமேல்... எனது முகம் வாழ்க்கையின் அலை மேல் சற்று உயரத் தள்ளி இருக்கிறது. அதற்கென்ன இப்போது?
அந்த ரகளை இவளை ஓட்டல் பக்கம் திரும்பச் செய்தது.
திரும்பியவள்...
அப்படியே மெய் மறந்து நின்றவள் போல், தெய்வத்தை, இலக்ஷயத்தைக் கண் எதிரில் கண்டவள் போல் அவற்றை... கண்களில் ஒரு பிரமிப்பு.
பிறகு...

