Chapter 3
இந்த வேடிக்கையைப் பார்க்க அந்த இரண்டு அநாதைகளின் அருகில் சென்றது குழந்தை. கிழவனுடைய தலைப் பக்கம் நின்றது.
இளைய பிச்சைக்காரன் மறுமுறையும் கிழவன் தொண்டையை நனைக்க முயன்று கொண்டிருந்தான். அவனுக்குக் கைப்பழக்கம் போதாது. அவன் ஊற்ற முயன்றபோது, ஒன்று அதிகமாகக் குபுக்கென்று விழுந்து கழுத்தை நனைத்தது; அல்லது டம்ளரிலிருந்து விழவேயில்லை.
கிழவன் தகரப் பீப்பாயைப் பிடித்துக் கொண்டு செத்துக் கொண்டிருந்தான்.
குழந்தை நீரைப் பருகுவதற்கு வாயைக் குவிய வைப்பதுபோல வைத்துக் கொண்டு, தன்னுடைய கையில் உள்ள கற்பனை டம்ளரைப் பிடித்தபடி, "மெதுவா, மெதுவா" என்றது.
தண்ணீர் வார்த்தவன் ஏறிட்டுப் பார்த்தான். "அம்மா, நீ இங்கே நிக்கப்படாது; அப்படிப் போயிரம்மா" என்றான்.
"ஏன்?" எனது குழந்தை.
"இவுரு சாவுறாரு" என்றான் பிச்சைக்காரன்.
"அப்படீன்னா?"
"சாவுறாரு அம்மா, செத்துப்போறாரு" என்று தலையைக் கொளக்கென்று போட்டுக் காண்பித்தான்.
அது குழந்தைக்கு நல்ல வேடிக்கையாகத் தோன்றியது.
"இன்னும் ஒருதரம் அப்படிக் காட்டு" என்றது.

