Chapter 5

நாயகம் வீட்டிற்கு வந்தவுடன் மிகுந்த களைப்பு. பள்ளிக் கூடத்திலும் உபாத்தியாயர்களுக்கு டிமிக்கிக் கொடுத்தவர், வெகு காலமாக உழைப்பென்பதே இல்லாதவர், இன்று உட்கார்ந்து கொண்டு சாரமற்ற பரிட்சை பதில்கள் எழுதிக்கொண்டிருக்க வேண்டுமென்றால், வீட்டில் வந்ததும் தனதறையில் சென்று உட்கார்ந்து இந்து தேச சரித்திரத்தைப் பற்றிய கேள்விகளுக்குப் பதில் எழுதவாரம்பித்தார். மனம் அதில் படியவில்லை. சரித்திரம் படித்து வெகு நாட்களாகிவிட்டது. புத்தகத்தைப் படித்துக் கொண்டு எழுதவேண்டியிருந்தது.

"சாரதா தண்ணீர் கொண்டுவா" என்று அந்தச் சாக்கில் நாற்காலியில் சாய்ந்துகொண்டார்.

சாரதா பயந்து நடுங்கிக்கொண்டு அவசர அவசரமாகத் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து மேஜையின் மீது வைத்துவிட்டுத் திரும்பினாள்.

"ஏன் ஓடுகிறாய், உட்காரு. கொஞ்ச நேரம் பேசலாம்" என்றார் நாயகம்.

தனது கணவன் இதுவரைத் தன்னிடம் இப்படிப் பேசியதைக் கேட்காத சாரதா, ஏதோ கோபிக்கத்தான் போகிறார் என்ற பயத்தில் நடுங்கிக்கொண்டு நின்றாள்.

"உட்காரு."

சாரதா பயந்துகொண்டு உட்கார்ந்தாள்.

"ஏன் சாரதா? என்னைக் கண்டால் ஏன் இப்படி ஒளிகிறாய்?" என்றார். காரணம் அவர்தான் என்பதை மறந்துவிட்டார் போலும்.

சாரதாவிற்குத் தன்மீது கோபம் இல்லை என்று தெரிந்தது. ஆனால் என்ன பதில் சொல்வது என்ற பிரச்னை.

"ஒளியலே" என்றாள்.

"பிறகு..."

பதில் இல்லை.

"இதை எழுதித் தொலைக்கிறேன். கொஞ்சம் உட்காரு. பிறகு பேசுவோம்."

திரு. நாயகம் என்னமோ எழுதிப் பார்த்தார். முடியவில்லை.

அதற்குள் சாரதா அந்தப் பெரிய புஸ்தகத்தில் படம் பார்க்க ஆரம்பித்துவிட்டாள். குழந்தையின் உள்ளம்.

"இவ்வளவும் படிக்கணுமா? எவ்வளவு பெரிசு!" என்றாள்.

அதிலே ஒரு ஆச்சரியம், அவளை அறியாது அதில் ஒரு பரிதாபம் கலந்தது.

"இவ்வளவும் படிக்கணும்."

"இவ்வளவுமா?" என்றாள்.

அவள் கையிலிருந்த புஸ்தகத்தை அவர் வாங்கும்பொழுது புஸ்தகம் விழுந்தது. சாரதாவின் தலை அவர் மார்பில் இருந்தது. அந்த நிமிஷம், தமது காதல் கோட்டை இருக்கும் இடத்தையறியாது போனாலும், களங்கமற்ற பாசத்தின் இருப்பிடத்தை அறிந்தார்.

ஹேமநளினிக்கு வாத்தியாரை ஏமாற்ற முடியவில்லை. ஜம்பம் சாயாது என்று கண்டுகொண்டாள். காரணம் தெரியாது. அவளுக்கும் கவலை இல்லை.

(முற்றும்)

ஊழியன், 28-12-1934