Chapter 5
"இது ரொம்ப - ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது. நீ இந்தப் 'பெரிய' சமாசாரத்தைச் சொல்லாவிட்டால் எனக்குத் தெரிந்தே இருக்காது. புது மருமகள் இருக்கிறாள் என்று தெரியாமல் போயிற்று. இந்தச் 'சந்தோஷ' சமாசாரத்தைக் கேட்ட பிறகு காது குளிர்ந்துவிட்டது. இன்னும் என்னமோ சொல்லவேண்டும் என்று வந்தீர்களே! அதைச் சொல்லுங்கள். கேட்கிறதற்குத் தயார். நேரமும் கொஞ்சம். ஆமாம் நான் டிபன் சாப்பிட வேண்டாமா?" என்று கேலியும் குத்தலுமாக மனதிலுள்ள வெறுப்பை எல்லாம் தமது வக்கீல் வேலையுடன் சேர்த்துக் காண்பித்தார். அமிர்தலிங்கத்திற்கு ஒரு புறம் கோபம், ஒரு புறம் வெறுப்பு. "வீட்டு விலாசம் 6, அய்யப்பன் பிள்ளைத் தெரு, மைலாப்பூர்" என்று சொல்லிக்கொண்டே வெளியே செல்லயத்தனித்தார்.
"போகாதேயுங்கள். கேட்டுவிட்டுப் போங்கள். இந்தக் கேஸிலிருக்கும் குற்றவாளியைத் தப்பவைக்க முக்கியமான சாட்சியம் அவரிடம் இருக்கிறதென்று சொல்லச் சொன்னார்."
"குற்றவாளி! எந்தக் குற்றவாளி?" என்றார் அமிர்தலிங்கம்.
"இப்பொழுது நடக்கிற கேஸில்... அந்தக் குற்றவாளி..."
"இந்தக் கேஸில் என் மகனுமா! உளறாதே. பயப்படாமல் சொல்லு. என்ன சொல்லுகிறாய்?"
"என்னுடைய அண்ணனை அவர் சாட்சியம் தப்புவிக்கும் என்று."
"உன் அண்ணன்!"

