Chapter 3

'வண்டி போய் ஒரு மாளிகை முன்பு நிற்கிற மாதிரி... குப்பம் இறங்கி குப்பனுக்குக் காசு கொடுக்கிறான்... இந்தாடா நாலணா... கூட ஓரணா எனாம்!... உம்... உள்ளே போகிறான்... உள்ளே ஸோபா... விசிப்பலகை... நாறுகட்டில் ஸோக்காத்தான் இருக்குது... 'குப்பாயி' என்று கூப்பிடுகிறான். 'போடா குப்பா. வேலை இக்குது' என்று குப்பாயி வருகிறாள்... அப்பொழுது ட்ராமில் ஏறிய கனவான் வருகிறார். 'ஏண்டா குப்பா ஏன் வூட்லே... 'போசாமி... அதெல்லாம் அந்தக் காலம் மலையேறிப் போச்சு... அண்ணைக்கி ஏமாத்தலேயோ? ஏய்! பூடு. அப்படி முழி... அப்போ ஏமாத்னப்ப எப்படி இருந்தது? குப்பாயி, வெளிலே புடிச்சுத் தள்ளு அவனை... வா... ஒனக்கு வேணும்னா நாலணா எடுத்துக்கினு பேசாதே ஓடிப்போ. கூச்சப் போடாதே, இது... குப்பாயி வூடு. தெரிஞ்சிதா... நீ வேண்ணா வெளிலே ரிக்ஸாக்குது; இஸ்து பொயிச்சிகோ...

'ஏண்டா முழிக்கிறே! போலீசைக் கூப்பிடுவேன்...'

படீரென்ற அறை. திடுக்கிட்டு நிற்கிறான். வண்டி லாந்தல் கம்பத்தில் மோதிக்கொண்டது.

"என்ன ரிக்ஷா, பிராட்வேக்கு வாரியா?" என்றார் ஒருவர்.

"ஏறு சாமி!"

"என்னா குடுக்கரே?"

"நாலணா!"

குப்பனுக்கு சற்றுமுன் இழந்த முதலாளிப் பதவியைவிட அந்த நாலணா மிகுந்த களிப்பைத் தந்தது.

நாலணா!

(முற்றும்)

மணிக்கொடி, 04-11-1934