Chapter 3

"கானனா? வா, வா!" என்று குடத்தை ஜலத்தில் நழுவவிட்டு அவன் மீது சாய்கிறாள்.

"இன்று ஏன் இவ்வளவு நேரம், போ! அந்தக் குயில்..."

"கானா, இன்று உனக்கு ஒரு சமாசாரம், நீ ஏன் உன் கவியைக் கொண்டு மன்னனிடம் பரிசு பெறக் கூடாது? இன்று யாரோ ஒரு கவியாம், போகிறானாம். அதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். நீ பாடுவதில் நூற்றில் ஒன்று கூட இல்லை. வெறும் வார்த்தைக் குப்பை. நீயேன்..."

"நானா! அரசனிடமா? நானா!"

"ஏன், கானா? நாம் இருவரும்..." என்று தழுவிக் குழைந்து அவன் கண்களில் உற்று நோக்கினாள். இருவரும் ஐக்கியப்பட்ட வாழ்க்கையின் கனவு அவள் கண்களில் தவழ்ந்தது.

"காவேரி! உனக்காக நான் போகிறேன்...!"

"என்ன, கானா, எனக்காகவா?"

"இல்லை கண்ணே, நமக்காக" ... சற்று மௌனம்.

இருவரும் தழுவி நிற்கின்றனர்.

அந்த மௌனத்தில் அவர்கள் அறிந்தது எவ்வளவோ.