Chapter 5
ஒருநாள் நான் அவனைப் பார்க்கச் சென்றேன். துரும்பாக இளைத்துப் போனான். ஆளே அடையாளம் தெரியவில்லை. அவனும் என்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லை.
அவன் எதிரில் உட்கார்ந்து அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அவன் என்னைக் கவனிக்கவே இல்லை.
திடீரென்று எழுந்தான் "கழுத்தை நெரிக்கிறானே! விடாதேயுங்கள். கழுத்தை நெரிக்கிறானே!" என்று சத்தமிட்டுக்கொண்டு அறையைச் சுற்றிச் சுற்றி ஓடிவந்து மத்தியில் விழுந்தான். பிராணன் போய்விட்டது.
பிறகு பிரேத சமஸ்காரத்திற்குக் கொண்டு போனோம். அவன் தகப்பனாரும் வந்திருந்தார். ஆஸ்பத்திரிக்குப் பக்கத்தில்தான் மயானம்.
அவனுக்குச் சிதையடுக்கிக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் சற்று தூரத்தில் இருவர் ஏதோ குழிவெட்டிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று இருவரும் 'மனித எலும்பு' என்று கூவினார்கள். நான் பக்கத்தில் சென்று கவனித்தேன்.
உள்ளே ஒரு இடிந்த சமாதி. அதனுள் ஒரு பெரிய எலும்புக் கூடு. கண்குழியில் ஒரு புழு. அதன் வலது முழங்கையிலிருந்த எலும்பைக் காணோம்!
என்ன?
அந்தச் சமாதிக் குழியில் ஒரு ஓரத்தில், எலும்புக் கூட்டின் இடது கையில் சுருங்கித் தோல் ஒட்டிக்கொண்டிருந்த முழங்கைத் துண்டு கிடந்தது. இடக்கை விட மாட்டேன் என்ற பாவனையாக அதன் மீது கிடந்தது.
அதே கை!
குழி வெட்டிக்கொண்டிருந்தவன், அதைக் கண்டுவிட்டான். "அடேயப்பா, கையை விடமாட்டாயோ?" என்று எடுத்தான். அந்த எலும்புக் கூட்டின் கண் குழியிலிருந்த புழு நெளிந்தது.
"தூ! அதை அங்கேயே போட்டு மூடிவிடு" என்றேன்.
"அப்படித்தான் செய்யவேண்டும் சாமி" என்றான்.
(முற்றும்)
ஊழியன், 14-12-1934 (புனைப்பெயர்: நந்தன்)
(பிரான்சு நாட்டு பிரபல எழுத்தாளர் மாபசான் கதையான La maind Ecorche என்ற கதையை தழுவி எழுதப்பட்டது.)

