Chapter 3

எம்.கே.நாயுடு என்ற பெரிய சரீரி, எல்லோரையும் கோட்டா பண்ணுகிறவர். ஒருவரையாவது விட்டுவைக்க மாட்டார். "ஆமாம்! இந்தப் புலி சொல்லுகிறதைக் கேட்டு முடிந்து வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பரமேஸ்வரனுக்கு மாமிசத்தில் கிறுக்கு விழுந்திருக்கிறது. அலைந்து போய் இதைக் கௌவிக்கொண்டு வந்திருக்கிறான்" என்று ஒரு போடு போட்டார்.

சிறிது நேரம் எல்லோரும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் பிரிந்தோம்.

நானும் பரமேஸ்வரனும் ஒன்றாக அவன் ரூமிற்குச் சென்றோம்.

அவன் அந்தக் கையைத் தன் கட்டிலுக்குமேல் தொங்கவிட்டு, 'வாழ்வாவது மாயம்' என்று சுவரில் எழுதினான்.

எனக்கும் பக்கத்து அறைதான். நேரமாகிவிட்டதென்று விடைபெற்றுக் கொண்டு சென்றேன்.

இரவு இரண்டு மணி இருக்கும்.

நான் திடுக்கிட்டு விழித்தேன். எங்கோ கூப்பாடு. இரைச்சல்.

கண்ணை விழித்ததும் பரமேஸ்வரனின் வேலைக்காரச் சிறுவன் என் பக்கத்தில் நடுநடுங்கிக்கொண்டு என்னை எழுப்ப முயல்வதை யறிந்தேன்.

முகத்தில் பயம் என்று எழுதியிருந்தது அவன் தோற்றம்.

"எஜமான், கொலை..." என்று என்னவோ அவன் உளறினான்.

நான் அவனைக் கவனியாது எனது நண்பன் அறைக்கு ஓடினேன்.

அறையின் நடுமத்தியில் என் நண்பன் தலைவிரி கோலமாகக் கிடந்தான்.