Chapter 1
அப்பொழுது நாங்கள் கலாசாலையில் படித்துக் கொண்டிருந்தோம். அந்தக் காலமே குஷி; கேள்வி கேட்பார் கிடையாது.
ஒரு நாள் சாயங்காலம் எங்கள் ரூமில் நாங்கள் உட்கார்ந்து பேசிச் சிரித்துக்கொண்டிருந்தோம். அப்பொழுது எங்கள் நண்பன் பரமேஸ்வரன், "எங்கிருந்து வருகிறேன் என்று தெரியுமா?" என்று சத்தம் போட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
"எங்கிருந்து வருகிறாய் என்று சொல்ல வேண்டுமாக்கும்?" என்று நாங்கள் அவனைப் பார்த்துச் சிரித்தோம்.
"போங்கடா முட்டாள்கள். ஊரிலிருந்து அதிசயம் ஒன்று கொண்டு வந்தால், முட்டாள்தனமாக என்னத்தையும் நினைத்துக் கொள்ளுகிறதா?" என்றான்.
"அதிசயத்தைச் சொல்லுமையா, கேட்போம்" என்றோம்.
பரமேஸ்வரன் வைத்திய கலாசாலை மாணவன். சஸ்திர வைத்தியத்தில் அபாரப் பிரேமை. கையில் ஏதோ ஒன்றைக் காகிதத்தில் சுருட்டி வைத்திருந்தான்.
"இதுதான் அதிசயம்" என்று அதைப் பிரித்துக் காண்பித்தான்.
அது ஒரு பிணத்தின் வெட்டுண்ட கை!
வெகு நாள் பட்டது. தோல்கள் சுருங்கி நகங்களுடன் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தது.
"சீச்சீ! தூக்கி எறி," என்று நாங்கள் கூவினோம்.
"இதன் கதை ரொம்ப சுவாரஸ்யமானது. கேளுங்கள்" என்று சாவதானமாக ஆரம்பித்தான்.

