Chapter 5

நிலவொளியிலே நிலா முற்றத்திலே அழகியநம்பியா பிள்ளை குழந்தையொன்றை வைத்துக் கொஞ்சுகிறார். குழந்தை கொஞ்சுகிறது.

"அப்பா யாரு?" என்று கேட்கிறார் அழகியநம்பியா பிள்ளை.

குழந்தை தனது நெஞ்சைத் தட்டிக் காட்டியது.

"முட்டாப்பயலே; நான்தாண்டா அப்பா! நீ பரமசிவம்... பரமசிவம் பிள்ளை!" என்றார் அழகியநம்பியா பிள்ளை.

"அப்பா யாரு?" என்றார் அழகியநம்பியா பிள்ளை.

குழந்தை அவரது நெஞ்சைத் தொட்டுக் காட்டியது.

"பரமசிவம் யாரு?" என்று கேட்டார் அழகியநம்பியா பிள்ளை.

"நான்" எனத் தனது நெஞ்சைத் தட்டிக் கொண்டது குழந்தை.

"போடு பக்காளி போடு! பத்துப் பக்காளி போடு!" எனக் குழந்தையை மெய்ம்மறந்து குதூகலத்தில் பந்துபோல் தூக்கிப் போட்டு விளையாடினார்.