Chapter 2
தன்னினைவில்லாமலே ஒரு வாலிபன் தெரு வழியாக வருகிறான். களைப்பு, பசி இவை இரண்டுந்தான் அப்பொழுது அவனுக்குத் தெரியும். மனிதனை மிருகமாக்கும் இந்தத் தெரு வழியாகத்தான் அவன் ஆபீஸுக்குச் செல்வது வழக்கம். அந்தப் பெயரற்ற ஆபீஸ், அவனை முப்பது ரூபாய்களுக்குச் சக்கையாகப் பிழிந்தெடுத்த பிறகு, இந்த உணர்ச்சிதான் வருமாக்கும்! அதோ அந்தப் பெண்ணுடன் இருக்கும் ஒருவன் - இவனைவிட அதிகமாகக் கொழுத்த தீனியா தின்கிறான்? அவன் தன்னை மறக்க - யோகிகளைப் போல் அல்ல - குடிக்கிறான். இவனுக்கு அது தெரியாது.
ஒரு மூலை திரும்புகிறான்; சற்று ஒதுக்கமான மூலை.
அலங்கோலமான ஸ்திதியில் ஒரு பெண்! பதினாறு, பதினேழு வயது இருக்கும். காலணா அகல குங்குமப் பொட்டு, மல்லிகைப் பூ, இன்னும் விளம்பரத்திற்குரிய சரக்குகள்.
அவளை அவன் கவனிக்கவில்லை.
"என்னாப்பா, சும்மாப் போரே? வாரியா?"
வாலிபன் திடுக்கிட்டு நிற்கிறான்.
"நீ என்னாப்பா, இதான் மொதல் தரமா? பயப்படுரியே?"
கையை எட்டிப் பிடித்தாள்.
"உன் பெயரென்ன?"
"ஏம் பேரு ஒனக்கு என்னாத்துக்கு?"
இவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரே ஒரு வழிதான் புலப்படுகிறது.
அதற்குள் அவள் சந்திற்குள் இழுக்கிறாள்.
வாலிபன் உடனே மடியிலிருந்த சில்லறைகளையெல்லாம் அவள் கையில் திணித்துவிட்டு, "போ! போ!" என்று அவளை நெட்டித் தள்ளிவிட்டு ஓடிவிடுகிறான்.
"ஏண்டா, பேடிப் பயலே! பிச்சைக்காரின்னா நெனச்சுகினே!" என்று சில்லறைகளை விட்டெறிகிறாள்.
அவன் அதற்குள் ஓடிப் போய்விட்டான்.
இந்த அசம்பாவிதமான செய்கையினால் அவள் மலைக்கிறாள். சற்றே பயம்.
"பேடிப் பயல்! பேமானி!" என்று முணுமுணுத்துக் கொண்டே, இருட்டில் சில்லறையைத் தேடுகிறாள்.
ஆனால் அவனும் அன்று பட்டினி என்று இவளுக்குத் தெரியாது.
எக்காளச் சிரிப்பு மாதிரி எங்கோ ஒரு பக்கத்திலிருந்து டிராமின் கணகணப்பு!
(முற்றும்)
மணிக்கொடி, 22-07-1934 (புனைப்பெயர்: கூத்தன்)

