Chapter 8
திடீரென்று எனது கைமேல் கூரிய நகங்கள் விழுந்து பிறாண்டிக் கொண்டு நழுவின.
நான் உதறியடித்துக்கொண்டு எழுந்தேன். நல்ல காலம்; வாய் உளறவில்லை.
என் மனைவியின் கைதான் அசப்பில் விழுந்து கிடந்தது.
அவளுடையதுதானா?
எழுந்து குனிந்து கவனித்தேன். நிதானமாகச் சுவாசம் விட்டுக் கொண்டு தூங்கினாள்.
கீழே சென்று பார்க்க ஆவல்; ஆனால் பயம்!
போனேன். மெதுவாகக் கால் ஓசைப்படாமல் இறங்கினேன்.
ஒரு யுகம் கழிந்த மாதிரி இருந்தது.
மெதுவாக முன் கூடத்தை எட்டிப் பார்த்தேன். வெளிவாசல் சார்த்திக் கிடந்தது. அருகிலிருந்த ஜன்னல் வழியாக விழுந்த நிலா வெளிச்சம் காலியாகக் கிடக்கும் பாயையும் தலையணையையும் சுட்டிக் காட்டியது.
கால்கள் எனக்குத் தரிக்கவில்லை. வெடவெடவென்று நடுங்கின.
திரும்பாமலே பின்னுக்குக் காலடி வைத்து நடந்து மாடிப்படியருகில் வந்தேன். உயரச் சென்றுவிட்டாளோ?
விடுவிடு என்று மாடிக்குச் சென்றேன்.
அங்கே அமைதி.
பழைய அமைதி.

