Chapter 2

"ராஜ ராஜ அரிகேசரி வர்மன் பராக்...!"

இன்னும் எத்தனையோ முழ நீளம் முடிவில்லாமல் செல்லுகிறது அவன் பெயர்!

முன்பு சிற்றரசர்கள், தானாதிபதிகள், தளகர்த்தர்கள் யாவரும் படிப்படியாக முறை முறை வந்து வழிபட்டு விலகி நின்று அடிபணிகிறார்கள்.

எங்கிருந்தோ மங்கள வாத்தியம் முழங்குகிறது.

உள்ளிருந்து ஒரு யௌவன புருஷன் - ஆணின் இலட்சியம் - வருகிறான். நெஞ்சிலே வைரங்கள் பதித்த குறுகிய கவசம் - மத்தியில் ரத்தினங்களில் புலி - காலில் வீரக் கழல், சிரத்திலே மரகதக் கிரீடம். இடையில் ஒரு சுரிகை.

அகன்று சுழன்று நேர் நோக்கும் வசீகரக் கண்கள். புருவத்தின் அழகை எடுத்துக்காட்டுவது போன்ற நெற்றி. அகன்ற நெற்றியிலிட்டிருக்கும் கருஞ்சாந்தின் அழகை மங்க வைத்து எடுத்துக்காட்டும் அந்தக் கண்களில் கனிவு, சிற்சில சமயம் மிடுக்கு.

மெதுவாக அசைந்தசைந்து உலகம் பெயர்வது போல் நிகரற்ற நடை. பக்கத்தில் வரும் ஒருவனுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டு வருகிறான்.

இருவரையும் பக்கத்தில் பக்கத்தில் பார்ப்பதிலே மனித இலட்சியங்கள் இரண்டையும் காணலாம்: ஒன்று மனிதனின் சக்தி; மற்றது மனிதனின் கனவு.