காட்சி 2
அறை முழுதும் இருளாக இருந்தும் – இடது புறமுள்ள பாத்ரூம் கதவுக்கு மேல் பதித்திருக்கும் கண்ணாடியினூடே தெரியும் வெளிச்சத்தால் அறையிலுள்ள பொருள்கள் எல்லாம் மங்கலாகத் தெரிகின்றன. ஈஸிசேரில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் பார்த்தசாரதி அதில் லேசாகப் புரள்கிறான். பாத்ரூமுக்குள்ளிருந்து ஷவரில் தண்ணீர் இரைகின்ற சத்தம் கேட்கிறது. பின்னர் அடங்குகிறது.
அவள் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து விளக்கைப் பொருத்துகிறாள். முதல் காட்சியில் இருந்தது போல் உடையணிந்து நிற்கும் அவள் தோற்றத்திலும், முகத்திலும் இப்போது ஆச்சரியப்படத் தக்க மாற்றம் காண்கிறது. அவள் நடை அமைதியாக இருக்கிறது. இவள் வேறு ஒருத்தி என்பது போல பாவனைகளே மாறி இருக்கின்றன. அங்கே இறைந்து கிடக்கும் சாமான்களை ஒழுங்குற எடுத்து வைக்கிறாள்.
கடிகாரத்தைப் பார்க்கிறாள். மணி ஆறு ஆகிறது. ஒரு பக்கம் திரும்பி மறைவாகக் காலுறைகளை அணிந்து கொண்ட பின் ஒரு விருந்தினர் வீட்டில் வந்து சிக்கிக் கொண்டு தவிக்கிற குழந்தைமாதிரிக் கட்டில் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு நகத்தைக் கடிக்கிறாள்.
அப்போது கதவு லேசாக இரண்டு முறை தட்டப்படுகிறது. காலடிச் சப்தம் கேட்காமல் மெதுவாக நடந்து போய்க் கதவைத் திறக்கிறாள். பான்ட்டும் ஸ்வெட்டரும் அணிந்த ராபர்ட்ஸ் உள்ளே வருகிறான்.
ஸ்டெல்லா: (மெதுவான குரலில்) குட்மார்னிங்!
ராபர்ட்ஸ்: ஓ! இட் இஸ் வெரி சில் அவுட்ஸைட்! (ஓ! வெளியே ரொம்பக் குளிராக இருக்கிறது என்றவாறு கைகளைத் தேய்த்துக் கொள்கிறான்.
ஸ்டெல்லா: ஸிட் டௌன்.
அவன் கட்டிலின் மீது உட்கார்ந்து ஈஸிசேரில் படுத்துறங்கும் அவனை வினோதமாகப் பார்க்கிறான். பின்னர் பாட்டிலைப் பார்க்கிறான்; அதில் மது பாதி இருக்கிறது. ‘அவன் குடிக்கவில்லையா’ என்று சைகையால் கேட்கிறான். அவளும் ‘இல்லை’ யென்று தலை அசைக்கிறாள். அவன் கண்களைச் சிமிட்டி எதையோ கேட்கிறான்.
ஸ்டெல்லா: ஹி இஸ் அன் ‘ஏ’ கிளாஸ் ஜென்டில்மன்…
அவன் பரிவாகத் தலையை ஆட்டிக் கொள்கிறான்.
ராபர்ட்ஸ்: ஷெல் ஐ ஆர்டர் ஸம் காபி? (நான் காப்பி கொண்டு வரச் சொல்லவா?.. என்றவாறு காலிங் பெல்லை அழுத்துகிறான். சற்று நேரத்தில் கதவு தட்டப்படுகிறது.)
ராபர்ட்ஸ்: கம் இன்.
ஹோட்டல் பணியாள் உள்ளே வருகிறான்.
ராபர்ட்ஸ்: காபி – திரீ.
பணியாள் போகிறான்.
பார்த்தசாரதி கைகளை விரித்துச் சோம்பலை உதறியவாறு தலை நிமிர்த்தி விழித்துப் பார்க்கிறான்… நிமிர்ந்து உட்கார்ந்து…
பார்த்தசாரதி: குட்மார்னிங்.
ஸ்டெல்லா – ராபர்ட்ஸ்: (இருவரும்) குட்மார்னிங்.
பார்த்தசாரதி எழுந்து போர்வையை மடித்து வைத்த பின் பாத்ரூமுக்குள் போய் வருகிறான். அந்த நேரத்தில் ராபர்ட்ஸ் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு மேஜை மீது கிடக்கும் புத்தகங்களைப் பார்க்கிறான்.
பணியாள் காப்பி கொண்டு வருகிறான். அந்த டிரேயை வாங்கி மேஜையின்மீது வைத்து ஒவ்வொருவருக்கும் ஒரு கப்பை எடுத்துத் தந்து தானும் ஒன்றை எடுத்துக் காப்பியை அருந்துகிறாள் ஸ்டெல்லா.
காப்பியைக் குடித்து முடித்த பின் ஸ்டெல்லா பார்த்தசாரதியின் அருகே வருகிறாள். அவனை நோக்கிக் கை நீட்டுகிறாள். அவள் கரத்தைப் பற்றி அவன் குலுக்குகிறான்.
ஸ்டெல்லா: தாங்க் யூ வெரி மச்! ஐ வுட் லைக் டு மீட் யூ எகைன்!… ஐ ஆம் ஸாரி… ஐ டின்ட் நோ தட் யூ ஹாவ் ஸச் அன் அவெர்ஷன் ஃபார் லிக்கர்… (நன்றி, உங்களை நான் மறுபடியும் சந்திக்க விரும்புகிறேன். எனக்குத் தெரியாது, உங்களுக்கு மதுவின் மீது இப்படி ஒரு வெறுப்பு இருக்கும் என்று…)
பார்த்தசாரதி: மே பி – இட்ஸ் மை வீக்னஸ்… (ஒருவேளை அது எனது பலவீனமாக இருக்கலாம்…)
ஸ்டெல்லா: நோ!… யுவர் வீக்னஸ் இஸ் சம்திங் எல்ஸ்… (இல்லை. உங்கள் பலவீனம் மற்றொன்று…)
பார்த்தசாரதி: (சிரிக்கிறான்.)
ஸ்டெல்லா: (ரகசியமாக) யூ ஆர் தி பஸ்ட் மேன் இன் மை லைப் – லீவிங் மீ லைக் திஸ் ஈவன் ஆப்டர் மை டிரிங்ஸ்! (நான் குடித்துவிட்ட பிறகும் என்னை இப்படி அனுப்புகின்ற முதல் மனிதன் நீங்கள்தான் என் வாழ்க்கையில்…)
பார்த்தசாரதி: தி கிரடிட் கோஸ் டு லிக்கர் – நாட் டு மீ… (அந்தப் பெருமை மதுவைச் சேர்ந்தது – என்னைச் சேர்ந்தது அல்ல…)
ஸ்டெல்லா: ஆர் யூ லீவிங் டு டே? (நீங்கள் இன்றைக்குப் போகிறீர்களா?)
பார்த்தசாரதி: எஸ்… ஸீ யூ ஸம்டைம். (ஆம், அப்புறம் எப்போதாவது பார்க்கிறேன் உன்னை.)
ஸ்டெல்லா: ஐ வில் டிரை டு கம் விதவுட் மை வீக்னஸ். ( எனது பலவீனத்துக்கு ஆளாகாமல் நான் வருவதற்கு முயல்கிறேன்.)
பார்த்தசாரதி: ஓ கே… ஆல் தி பெஸ்ட்…
ஸ்டெல்லா: பை…
ஸ்டெல்லா வெளியேறுகிறாள். அவளைத் தொடர்ந்து கதவருகே வந்து நிற்கிறான் பார்த்தசாரதி. ராபர்ட்ஸ் அந்த பாட்டிலை எடுத்து பான்ட் பாக்கெட்டில் திணித்துக் கொண்டு புறப்படுகிறான். அருகே வந்த போது அவனை நிறுத்துகிறான் பார்த்தசாரதி.
பார்த்தசாரதி: (ரகசியமாக ராபர்ட்ஸிடம்) ஷீ இஸ் அன் ஏஞ்சல்… டேக் கேர் ஆஃப் ஹெர்! (அவள் ஒரு தேவதை; அவளை ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொள்!…)
ராபர்ட்ஸ்: தாங்க் யூ ஸார்…
வெளியேறுகிறான். மாடிப் படிகளில் ஷீஸ் அணிந்த பாதங்களின் சப்தம் கேட்கிறது. காலடி ஓசை தேய்ந்து மறைந்த பின், கதவை மூடிவிட்டு – ஒருமுறை அறைக்குள் தனிமையில் சிந்தனையோடு நாலு புறமும் உலவி நடக்கிறான் பார்த்தசாரதி. பின்னர் பாத்ரூமுக்குள் சென்று கதவை மூடிக் கொள்கிறான். ஷவரிலிருந்து தண்ணீர் பிரவகிக்கின்ற சப்தம் கேட்கிறது.

