Chapter 4

சரவணன் வீட்டுக்குள் நுழைந்தபோது, அம்மா வெளியேறிக் கொண்டிருந்தாள். அவன் அவளைப் பார்க்காமல், ஜன்னல் கம்பியில் முகம் பதித்தபடி, லயித்து நின்ற தங்கை வசந்தாவைப் பார்த்தான். எதிர் ஜன்னலில் ஒருவன் இவனைப் பார்த்ததும், நழுவினான். அப்படியும் இருக்குமோ. சீ. என் தங்கையா அப்படி? இருக்காது. தற்செயலாக நின்றிருப்பாள் கையில் ஏதோ புத்தகத்தோடுதான் நிற்கிறாள். படித்த அலுப்பில், முதுகு வலியில் ஜன்னல் பக்கம்போய் சாய்ந்திருப்பாள் என்றாலும், கேட்டான்

"வசந்தா. கைல. என்ன புக்..?”

"கா. காம்பட்டிஷன் மாஸ்டர்."

வசந்தா காட்டினாள். அவனுக்குத் திருப்தி தன்னையே நொந்து கொண்டான். ஒருவனுக்கு மனோநிலை பாதித்தால், பிறத்தியார் மனத்தையும் நோய்க் கணக்கோடு பார்ப்பான் என்பது எவ்வளவு உண்மை. அவன், தனது அறைக்குள் போகப் போனபோது, அம்மாக்காரி திரும்பி வந்தாள்.

"ஆமாடா. தெரியாமத்தான் கேட்கேன். நாம ஒரு காலத்துல இருந்த நிலைமையை நினைச்சுப் பார்க்கணும்."

"என்னம்மா சொல்றே?"

"நம்ம ஊரு பெருமாளும், துரைச்சாமியும். ஒன்னைப் பார்க்க ஆசையோட ஆபீஸுக்கு வந்தால், அப்படியா விரட்டி அடிக்கிறது? நாமளும் பழைய நிலையை மறந்துடப் படாதுடா."

"நான் பழைய நிலையை மறக்காததால்தான், விரட்டுனேன். வரப்புத் தகராறுல, அந்தப் பணக்காரன் பலவேசத்துக்கு வக்காலத்து வாங்கி, நம் அண்ணிய இவங்க ரெண்டுபேரும் மானபங்கமாய் பேசுன பழைய காலத்தை நான் மறக்கல."

"முப்பழி செய்தவனாய் இருந்தாலும், முற்றத்துக்கு வந்துவிட்டால், அவனை உபசரிக்கணும்; ஊர்ல ஆயிரம் நடந்திருக்கலாம். அதுக்காக இப்படியா அடிச்சு விரட்டுற்து? இங்க வந்து ஒரு பாடு அழுதுப்டுப் போறாங்க. அப்புறம் ஒன் தங்கச்சிகிட்ட எதையோ எழுதிக் கொடுத்துட்டுப் போனாங்க."

"நீ இப்போ எங்கம்மா போறே?"

"பிள்ளையார் கோவிலுக்குத்தான். என்னால வேற எங்க போகமுடியும்.? வந்து மூணுமாசமாகுது. வண்ணாரப் பேட்டையில நம்ம ஜனங்களைப் பார்க்கல. ஒரு இடத்தைச் சுத்திப் பார்க்கல. நீ பெரிய அதிகாரியாம். ஒன்னைவிட சின்ன ஆபீஸர் வீட்டு முன்னால் கார் நிக்குது. அவங்க சொந்தக்காரங்கள மகாபலிபுரமோ, ஏதாமோ. அங்கேகூட கூட்டிக்கிட்டுப் போறாங்க. நீயும்தான் இருக்கே. ஏய் வசந்தா. அண்ணன்கிட்ட கேளும்மான்னு அப்போ சொல்லிக் கொடுத்துட்டு. இப்போ ஏன். ஒண்னும் தெரியாதவள் ம்ாதிரி நிற்கே? ஒன்னோட சொந்த அண்ணன்தானடி ஒன்னோட ரத்தம்தானடி வேற மாதிரியா. கேளுழா. இவ்வளவுக்கும் செளமியோ செளக்கியமோன்னு ஒரு மவராசன் எத்தனை தடவ கார் தாரேன்னான்."

சமயலறையில் இருந்து வெளியே எட்டிப் பார்த்த அண்ணி தங்கம்மா, மாமியார் சொன்னது தனக்குத்தான் என்பதைப் புரிந்து கொண்டே உள்ளே ஒடுங்கிக் கொண்டாள். வேற மாதிரியா. என்ற வார்த்தை என்ன வார்த்தை?

சரவணன் சீறினான்.

நீ. மொதல்ல கோவிலுக்குப்போம்மா. அப்படியாவது ஒனக்குப்புத்தி வருமான்னு பார்ப்போம். வசந்தா. நீயும் போ. என்னது இது? நம்ம ஊர் பெருச்சாளிங்க எழுதிக் கொடுத்ததா? நீயே கிழிச்சிப் போட்டுடு அநியாயம் செய்யாமலே நான் படுற பாடு போதும்."

சரவணன், தனது அறைக்குள் வந்தான். ஆடைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றுகூட அவனுக்குத் தோன்றவில்லை. பாவிப்பயல் சௌமி நாராயணனுக்கு. இப்படிப் பழி சொல்ல, எப்படி மனசு வந்தது? முன்பு இருந்த அறைக்குக்கூட, ஒரு தடவை ஆப்பிள் கூடையோடு வந்தான். மரியாதைக்காக ஒரு ஆப்பிளை எடுத்துக் கொண்டு, அனுப்பப்பட்டான். இதே இந்த வீட்டிற்கு, வாடகை முன்பணமாய், இரண்டாயிரம் ரூபாய் கேட்டார்கள். இதை செக்ரடேரியட் கமலேக்கருக்கு, டெலிபோனில் தெரிவித்து, சரவணன் கடன் கேட்டான். அப்போது, அவனுக்கு முன்னால் இருந்த சௌமி, நான் தரேன் ஸார். நீங்க அப்புறமாய். எப்போ வேணுமின்னாலும் தாங்க ஸார் என்றார். சரவணன், நான் கடன் வாங்குறதா இல்ல அப்படியே வாங்குவதாய் இருந்தாலும் நெருக்கமானவங்ககிட்டே - அதுவும் இந்த ஆபிஸோடு சம்பந்தப் படாதவங்க கிட்டேதான் - கேட்பேன்’ என்றான். உடனே, அவர் மழுப்பலோடு சிரித்தார். அப்படியும் அந்த மழுமாறிப் பயல், இந்த வீட்டுக்கே காரோடு வந்து பெரியம்மா! ஓங்க மகனுக்குப் பிழைக்கத் தெரியலை. நான் என்ன லஞ்சமா கொடுக்கிறேன்?. ஒங்க வயித்துல பிறந்த மகன் மாதிரி நான் என்றான்.

வீட்டுக்கு ஒருவன் சைக்கிளில் வந்தாலேயே, பெரிய மனுஷியாய் ஆகிவிட்டதாய் நினைக்கும் அம்மா, காரில் வந்தவன் அப்படிப் பேசியதைப் பார்த்துவிட்டு, அவன் கையில்கூட முத்தமிட்டாள். ஒருதடவை, சரவணன்தான், அலுவலகத்திற்கு வந்த சௌமியிடம் நான். நான் சுத்தமாய் இருக்க விரும்புறவன். என்னை அசுத்தப்படுத்தப் பார்க்காதிங்க ஸார். நீங்க நினைக்கிறது மாதிரி ஆளுல்ல நான் என்றான். அப்போதுகூட 'ஸாரி ஸார். ஒங்க நேர்மைக்குத் தலைவணங்குறேன் ஸார் என்று சொன்னவன் இப்போது எப்படி எழுதியிருக்கான்.? இந்த 'டெம்போ விவகாரத்த வெச்சி புகார் லெட்டருக்கு எப்படி "டெம்போ கொடுத்திருக்கான். நான் லஞ்சப் பேர்வழியாம். பில் கொடுத்தானாம். பணம் கொடுக்கலீயாம் மிரட்டுறேனாம். அடேய் சௌமி ஒன் கை அழுகுண்டா. வீட்டு வாடகை கொடுக்க முடியாமல், சம்பளத்துல, ஸ்கூட்டர் அட்வான்ஸ், கூட்டுறவு சங்கக் கடன்னு எத்தனையோ பிடிப்புகள்ல சிக்கி அல்லாடுறவண்டா நான். அப்போகூட எவன் கிட்டயாவது வாங்கணுமுன்னு ஒரு எண்ணம் கூட வர்லடா. என்னைப் போயா அப்டி எழுதிட்டே? என் அம்மா ஒன்னை மகனாய் நினைச்சு. முத்தம் கொடுத்தாளே. அவள் பெத்த பிள்ளையையாடா இப்டி அவதூறு பண்ணிட்டே?.

'காபி என்ற குரல் கேட்டு, சரவணன் நிமிர்ந்தான். அவனது கலக்கத்தில், அண்ணி தங்கம்மா கலக்கத்தை அவன் புரிந்து கொள்ளவில்லை. மெளனம்ாக டீயைக் குடித்தான். அவனையே தங்கம்மா பார்த்தாள். 'முகம் ஏன் இப்படி கலங்கியிருக்குது? ஒருவேளை எனக்குத்தான் அப்படித் தெரியுதா? இவனும் ஒருவேளை என்னை உதாசீனம் செய்யுறானோ? அப்படின்னால் எனக்கும் நல்லது. பழையபடியும் வயல் வேலைக்குப் போயிடலாம். இல்லன்னா பிறந்த வீட்டுக்குப் போயிடலாம். அம்மாவுக்கும் கடைசி காலம். எனக்குக் கரையேறுற காலம். உதாசீனம் செய்யுறானோ? இருக்காது. நம்ம அண்ணின்னு என்னை ஒருகாலத்துல கண்டபடி அந்த சண்டாளன் திட்டுனதை, இன்னிக்கும் நெனச்சுட்டு இருக்கானே. 'அநியாயம் செய்யாமலே மாட்டிக்கிட்டுத் தவிக்கிறேன்னு சொன்னானே. என்ன மாட்டல்? நாமே கேட்கலாம்.

"என்ன. ஒரு மாதிரி இருக்கிங்க?" அவள் கேட்டாள்.

"எல்லாம் உங்களாலதான்."

"என்னாலயா?"

"ஆமா. வேலையில் சேருறதுக்கு முன்னால, ஒங்க அண்ணன், வழக்குல அரை கிளாஸ் டீ கூட வாங்க மாட்டாரு. நீயும் அப்படி இருக்கணுமுன்னு சொன்னிங்க. நான் வேற எது வாங்காட்டாலும். சில சமயம். காண்டிராக்டர்கிட்ட காபி குடிச்சேன். அது தப்புத்தானே. தண்டனை நியாயந்தானே."

"நீங்க பாட்டுக்கு."

"ஏது. இங்க வருது. சர்த்தான். பேசுனால், நீ நான்னு பேசுங்க, இல்லன்னா போங்க."

"இன்னிக்கு ஒன் முகம் ஏன் ஒரு மாதிரி இருக்குப்பா. காச்ச மரத்துலதான் கல் விழும். அதுக்காப் போய்."

"இப்போ. எனக்கு எதுவும் இல்லை. நீங்கதான் கொஞ்ச நாளாய் ஒரு மாதிரி இருக்கீங்க."

அப்டி ஒண்ணுமில்லியே."

"எனக்கு தெரியும் அண்ணி. அம்மா இந்த வீட்ல உங்களுக்கு உரிமை இல்லன்னு குத்திக் காட்டுறாள், வசந்தா ஆமாம் போடுறாள், சரிதானே?"

"அப்டில்லாம் அதிகமாய்."

"ஓஹோ. அப்போ கொஞ்சமாய் இருக்குது. "ஒன்கிட்ட வாயைக் கொடுத்திட்டால் அப்புறம் மீள முடியுமா?"

"நீங்க என்கிட்ட மீளமுடியாமல் இருக்கணுமுன்னு ஒரு முடிவு செய்துட்டேன். எங்கம்மாவோட போக்கும், நாய் வாலும் ஒரே மாதிரி. நேராகாது. ஒங்களுக்கு இந்த வீட்ல உரிமை உண்டுன்னு அம்மா எப்போதும் நினைக்கணும். அதுக்காக ஒரு முடிவு செஞ்சிருக்கேன். ஒங்க தங்கை ஒண்ணு காலேஜ்ல படிச்சுட்டு சும்மா தானே இருக்குது?"

"ஆமாம். நீ எதுக்கு."

'அவளை சின்ன வயசுல பார்த்தது; எனக்குக் கட்டிக் கொடுப்பாங்களா? கல்யாணம் ஆகட்டும். அப்புறம் ஓங்க மாமியார் என்ன பேசுறாள்னு பார்ப்போம். லெட்டர் எழுதுங்க அண்ணி. ஆனால் ஒன்று. ஒங்க தங்கை ஓங்களை மிரட்டுறாள், எடுத்தேன் கவிழ்த்தேன்னு பேசுறாள்னா, கொன்னுப்புடுவேன் கொன்னு."

"எந்தப் பெண்ணையும் - அவள் மோசமானவளாய் இருந்தாலும்அடிப்பது அநாகரீகம்"

"நான் நாகரிகமாய் கேட்டால், கொடுக்க மாட்டிங்க. நானே போய் கூட்டிட்டு வந்துடட்டுமா"

"ஒன்னைக் கட்டிக்க அவளுக்குக் கொடுத்து வச்சிருக்கணும். இப்போ அதுக்கு அவசரமில்ல. வசந்தா தான் அவசரம்."

"என்ன அண்ணி சொல்றீங்க?"

"அவளுக்குக் காலா காலத்துல முடிச்சுடனும். ஒன் கல்யாணம் எப்போ வேனுமானாலும் நடக்கட்டும். ஆனால் அவள் கல்யாணம் இப்பவே நடக்கணும்."

"அவளுக்கு என்ன அவசரம்? மொதல்ல வேலைக்குப் போகட்டும்."

"நான் சொல்றதைக் கேளுப்பா. நாளையில் இருந்து அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கிற வேலையைத் துவக்கு. இப்போ, அவளுக்குத் தேவை வேலையில்ல. கல்யாணம்."

"என்ன பூடகமாய் பேசுறீங்க?"

"பூடகமும் இல்ல. எதுவும் இல்ல. ஏதோ மனசுல தோணுது. உண்மையைச் சொல்லப் போனால். ஒன்னைவிட இப்போ எனக்கு அவள் மேலதான் கவலை.

"சரி. ஒங்க கவலையைத் தீர்க்கறதுக்காவது. மாப்பிள்ளை பார்க்கேன்."

தங்கம்மா, பூரிப்போடு புன்னகைத்தாள். சரவணன் இன்னும் குழந்தை மாதிரிதான். இடுப்பில் இருந்த பிள்ளை, என்னமாய் வளர்ந்துட்டான். வாரவங்ககிட்டயும், போறவங்கக்கிட்டயும், எவ்வளவு பக்குவமாய் அழுத்தமாய் பேசுறான். எல்லாத்துலயும் அவன் அண்ணன் மாதிரி. இல்ல. இல்ல. அவரை மிஞ்சிட்டான். இன்னும் மிஞ்சணும்."

சரவணன் அண்ணியிடம் அலுவலகத் தலைவலிகளைச் சொல்லப் போனான். அண்ணிக்கு விவரங்கள் புரியாது என்றாலும், அவற்றிலுள்ள விஷம் புரியும், அதை முறியடிக்கிற மருந்தையும் சொல்வாங்க. நீண்ட நாட்களுக்குப் பிறகு, அண்ணியிடம் மனம் விட்டுப் பேசிய திருப்தி. மனமே அற்றுப் போனது போல் பேச வேண்டும் என்ற ஆவல். நடந்ததை விளக்கி, தான் நடந்து கொள்ள வேண்டியதைக் கேட்பதற்காக, உட்காருங்க அண்ணி என்றான். உட்காரத்தாள் போனாள். அதற்குள் வாசலில் செருப்புச் சத்தம், அம்மாவின் அதிருப்தியான குரல்….

தங்கம்மா, அவனிடம் சொல்லாமலே ஓடினாள். காபி டம்ளரைக் கூட எடுக்காமலே ஓடினாள். சரவணனுக்கு, என்னவோ மாதிரி இருந்தது. அண்ணி எதுக்காக இப்படி பயப்படனும்? அம்மா இந்த அளவுக்கா அவங்களைப் பயமுறுத்தி வச்சிருப்பாங்க.?

சரவணன், எரிச்சலோடு கட்டிலில் சாய்ந்தான். காண்டிராக்டர் சௌமி நாராயணனில் இருந்து, பியூன் அடைக்கலம் வரைக்கும், அவள் கண்ணில் விரல் வைத்து ஆட்டினார்கள்.

அவன் கண்களை மூடிக் கொண்டான். ஆனால், அந்தக் காட்சிகள் அதிகமாயின. மீண்டும் கண்களைத் திறந்தான். உள்ளங் கைகளை, வெறியாகப் பார்த்தான்.

"இதையா. லஞ்சம் வாங்குவதாய் சொல்றே? ஏய் செளமீ."

அவன், தன்னையறியாமலே கத்தினான்.