குருட்டுக் கிழவன்

ஒரு நாள் சாரு தான் கற்றுக்கொண்டிருந்த இங்கிலீஷ் நடனத்தை உமாராணிக்கு ஆடிக் காட்டிக் கொண்டிருந்தாள். உமா அதைப் பார்த்து மிகவும் சந்தோஷமடைந்து, 'இப்படிப்பட்ட குழந்தையைப் பெறுவதற்கு நாம் எவ்வளவு பாக்கியம் செய்தோம்!' என்று எண்ணினாள். அதைத் தொடர்ந்து, 'இந்தப் பாக்கியம் நமக்கு நீடித்திருக்க வேண்டுமே? நம்முடைய ஜன்மம் துரதிர்ஷ்ட ஜன்மமாயிற்றே!' என்ற எண்ணம் உண்டாயிற்று.

அப்போது வாசலில், "அம்மா! கண்ணில்லாத கபோதி! ரெண்டு பிச்சை போடுங்கோ!" என்று ஒரு குரல் கேட்டது. அது கிழவனுடைய குரல்; அதிலிருந்த நடுக்கம் கேட்பவர்களுடைய உள்ளத்தை உருக்குவதாயிருந்தது.

பிறகு, அந்தக் கிழவனின் குரலும் இன்னொரு சிறு பெண்ணின் குரலுமாகச் சேர்ந்து பாடும் சத்தம் கேட்கத் தொடங்கியது;

"தில்லையம்பல ஸ்தல மொண்டிருக்குதாம்-அதைக் கண்டபேர்க்கு

ஜனனமரணப் பிணியைக் கருக்குதாம்."

சாரு ஆட்டத்தை நிறுத்திவிட்டு ஜன்னலோரமாகச் சென்று பார்த்தாள். அப்போது வாசல் 'கேட்'டுக்கு அருகில் ஒரு கிழவனும் ஒரு சிறு பெண்ணும் நின்று பாடுவது தெரிந்தது. சாரு பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பங்களாவின் தர்வான் அங்கே வந்து, "போ! போ!" என்று அவர்களை விரட்டினான். "மாமி! மாமி! இங்கே சுருங்க வாங்கோ!" என்று அடித்துக் கொண்டாள் சாரு. உமா அவள் அருகில் வந்ததும், "மாமி! மாமி! அந்தக் கிழவனையும் பெண்ணையும் தர்வான் விரட்டுகிறான். ஐயையோ! அவா போறாளே! திரும்பி வரச் சொல்லுங்களேன்!" என்று சாரு கூவினாள்.

உமா, "நல்ல பொண்ணடி நீ!" என்று சொல்லிச் சிரித்துவிட்டு, "தர்வான்! அவர்களைக் கூப்பிடு" என்று உத்தரவிட்டாள். தரவான் ஓடிப் போய், "இந்தாங்க; இங்கே வாங்க. உங்க பாடு யோகந்தான்" என்றான். கிழவனும் பெண்ணும் திரும்பினார்கள். கிழவன் ஒரு கையில் கோல் ஊன்றிக் கொண்டிருந்தான். இன்னொரு கையை அந்தச் சிறு பெண் பிடித்துக் கொண்டு முன்னால் வர, கிழவன் பின் தொடர்ந்து வந்தான்.

"மாமி! அந்தப் பொண்ணு ஏன் அந்தக் கிழவன் கையைப் புடிச்சுண்டே வர்றது?" என்று சாரு கேட்டாள்.

"உனக்குப் பார்த்தாத் தெரியலையா, என்ன? அந்தக் கிழவனுக்கு ரெண்டு கண்ணும் பொட்டை. அதனாலேதான் அந்தப் பொண் எங்கே போனாலும் அவன் கையைப் புடிச்சு அழைச்சுண்டே போறது" என்றாள் உமா.

"அதுதான் நானும் நெனைச்சேன். கண் பொட்டையாப் போனா ரொம்பக் கஷ்டமில்லையா, மாமி!" என்றாள் சாரு.

அதற்குள் கிழவனும் பெண்ணும் மறுபடியும் 'கேட்'டுக்குப் பக்கத்தில் வந்து நின்று,

"உயருஞ்சிகரக் கும்பம் தெரியுதாம்-அதைப் பார்த்தபேர்க்கு

உள்ளங்குளிர கருணை புரியுதாம்"

என்று பாடினார்கள். கண் தெரியாத ஒருவன் இந்த மாதிரி பாடியதால் அதனுடைய உருக்கம் அதிகமாயிற்று. நந்தனுக்கு, தூரத்தில் நின்று கோபுர சிகரத்தைக் காணலாமென்ற நம்பிக்கையாவது இருந்தது. இந்தக் குருடனுக்கு அந்த நம்பிக்கைக்கும் இடமில்லையல்லவா? ஆகையால் பாட்டைக் கேட்டு உமாராணிக்குக் கண்ணில் ஜலம் வந்து விட்டது.

சாரு இதைக் கவனிக்கவில்லை. அவள் வெளியில் பார்த்தவண்ணமே, "மாமி! அந்தப் பொண்ணைப் பார்த்தா எனக்குப் புடிச்சிருக்கு. எவ்வளவு நன்னாப் பாடறது? அவளையும் நம்மாத்திலே கூப்பிட்டு வச்சுக்கலாமா?" என்று கேட்டாள்.

இந்தக் கேள்வியினால், உமாவின் மனத்தில் ஏற்பட்டிருந்த உருக்கம் மறைந்து விட்டது. சிறிது கடுமையான குரலில், "ரொம்ப அழகாத்தானிருக்கு! தெருவோடு போகிற குழந்தைகளையெல்லாம் நாம் அழைச்சு வச்சுக்கறதா என்ன?" என்றாள்.